மிக்ஜாம்: போர்க்கால அடிப்படையில் மீட்பு & நிவாரணப் பணிகள்.. ஓரணியாய் திரள்வோம்.. முதலமைச்சர் அழைப்பு.!!
மிக்ஜாம் புயல் தொடர்பான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடைபெற்று வருகிறது. அதனுடன் கரம் கோர்ப்போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
![Lets come together to wipe out the woes of the worst michaung cyclone. Chief Minister MK Stalin gave a clapped call Lets come together to wipe out the woes of the worst michaung cyclone. Chief Minister MK Stalin gave a clapped call](https://static-ai.asianetnews.com/images/01hgv1gsjqkbv01vejg7ps4ssy/asianet-news---2023-12-04t235930-844_363x203xt.jpg)
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.12.2023) முகாம் அலுவலகத்திலிருந்து அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் நா. எழிலன், இ. கருணாநிதி,. இ. பரந்தாமன், எஸ். அரவிந்த் ரமேஷ் மற்றும் திரு.வி.க. நகர் கண்காணிப்பு அலுவலர் கணேசன் ஆகியோரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மிக்ஜாம் புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்ததோடு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர். நா. எழிலன் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மாண்புமிகு முதலமைச்சர், மிக்ஜாம் புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் மரு. எழிலன் அவர்கள் ஆயிரம் விளக்கு பகுதியில் 30,000 குடும்பங்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக 16 முகாம்கள் மற்றும் பள்ளிக்கூடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
திரு.வி.க. நகர் கண்காணிப்பு அலுவலர் கணேசன், இ.ஆப. அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது திரு. கணேசன் அவர்கள், கொளத்தூர் மற்றும் திரு.வி.க. நகர் பகுதியில் 20,000 மக்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பின்னர், மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர். திரு.பி.கே. சேகர்பாபு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் விவரங்கள் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, '#CycloneMichaung' இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது.
முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு குறைத்திருக்கிறோம்/ தடுத்திருக்கிறோம். மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது. இன்னலி்ல் இருக்கும் மக்களுடன் நமது அரசு என்றும் துணை நிற்கும்.
கட்சி வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் சக்தியின் துணைகொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம். இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம்! அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன். வெல்லட்டும் மானுடம்!” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா