வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் ஒட்டு மொத்த குடும்பமும் முகாமில் தனிமை.. சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு
சென்னையில் கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி வளாகத்தில் ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சென்னையில் கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்களில் 15 % பேர் கட்டுப்பாடுகளை மதிப்பதில்லை. ஆகையால், கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இனி அரசின் முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீடுகளில் தனிமைப்படுத்தும் சில நபர்களால் அதிக பரவல் ஏற்படுகிறது. தனிமைப்படுத்தும் விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும், வீட்டில் ஒருவருக்கு கொரோனா என்றால் மொத்த குடும்ப உறுப்பினர்களும் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றார்.
மேலும், கொரோனா குணமடைந்து பணிதிரும்புவோரை பணி அமர்த்த மறுப்பது சட்டப்படி தவறு. உடற்தகுதி சான்றிதழ் கேட்பது சட்டப்படி தவறு. முறையாக புகார் வந்தால் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.