12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா?... பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை...!
12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை நடத்தலாமா? இல்லை தள்ளிவைக்கலாமா? என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க ஆரம்பித்தத்தை அடுத்து சில கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. திருவிழா, மத நிகழ்ச்சிகளுக்கு தடை, பேருந்தில் நின்று கொண்டு பயணிக்க தடை, தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என எக்கச்சக்க கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மாணவர்களின் நலன் கருதி 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்து ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் அவர்களுக்கான வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டு, விடுமுறை அறிவிக்கப்பட்டது.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கண்டிப்பான முறையில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. திமிட்டப்படி மே 3ம் தேதி பொதுத்தேர்வு நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில், கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால் தேர்வு நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை நடத்தலாமா? இல்லை தள்ளிவைக்கலாமா? என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளார் தீரஜ்குமார், இயக்குநர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் ஆகியோருடன் காணொலி காட்சி மூலமாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.