6 மணிக்குள் முடிக்கணும்.. விநாயகர் சிலைகள் கரைப்புக்கு உத்தரவிட்ட காவல்துறை!!
சென்னை முழுவதும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.
நாடுமுழுவதும் கடந்த 2 தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு கோவில்கள் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.
ஒவ்வொரு ஊர்களிலும் குறிப்பிட்ட ஒரு நாளில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்க காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் சென்னையின் பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வருகிறது. சென்னையை சுற்றிலும் 2500 விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை சார்பாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த சிலைகளை காசிமேடு , பட்டினம்பாக்கம் , நீலாங்கரை உள்ளிட்ட 6 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஊர்வலமாக கொண்டு வர படுகின்றன. அதை தொடர்ந்து அந்தந்த பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் கடலில் கரைக்கப்படுகிறது. சென்னையை சுற்றிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக மாலை 6 மணிக்குள் சிலைகள் கரைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்தார். மேலும் தற்போது வரை எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் ஊர்வலங்கள் வருதாகவும் குறிப்பிட்டார்.