கோழியை காப்பாற்ற நடந்த அறுவை சிகிச்சை! -உயிரிழப்பில் முடிந்த பாசப்போராட்டம்
சென்னையில் தங்க கம்மலை விழுங்கிய கோழியை அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்ற முயன்றபோது அது பரிதாபமாக உயிரிழந்தது.
சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் சிவகுமார் . இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் செல்ல பிராணிகள் மீது ஆர்வம் கொண்டு வளர்த்து வருகிறார். கடந்த ஆண்டு ஒரு நாட்டுக்கோழி வாங்கி அதற்கு பூஞ்சி என்று பெயரிட்டு பாசமாக வளர்த்து உள்ளார். அவரது அக்காள் மகள் தீபாவும் கோழி மீது பாசமாக இருந்து உள்ளார். பூஞ்சியை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பாவித்து வளர்த்து வந்து உள்ளனர் .
இந்த நிலையில் கடந்த 4 ம் தேதி தீபா தனது தங்க கம்மலை கழட்டி வைத்திருந்த போது அதை இரை என நினைத்து கோழி விழுங்கி விட்டது . இதனால் செய்வது அறியாமல் திகைத்த தீபா இது குறித்து குடும்பத்தினரிடம் கூறி உள்ளார்.
உடனே அவர்கள் அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று உள்ளனர் .
மருத்துவரிடம் தனக்கு கம்மல் முக்கியம் இல்லை என்றும் கோழியின் உயிர் தான் முக்கியம் என்று கதறி அழுதுள்ளார் தீபா. அவரை சமாதானம் செய்த மருத்துவர் அறுவைசிகிச்சை செய்து கோழியை காப்பாற்றி விடலாம் என சமாதானம் செய்து உள்ளார்.
அதன்படி கடந்த 8 தேதி கோழிக்கு மயக்க மருந்து செலுத்தியும் , செயற்கை சுவாசம் அளித்தும் அறுவைசிகிச்சை நடந்து உள்ளது. கோழியின் இரைப்பையில் குத்தி இருந்த தங்க கம்மலை மருத்துவர் எடுத்தார். அரைமணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையின் இறுதியில் கோழி பரிதமாக உயிரிழந்தது. இதை அறிந்த சிவகுமார் வருத்தத்துடன் கோழியை வீட்டிற்கு எடுத்துச்சென்றுள்ளார். அங்கு உயிரற்ற கோழியையை பார்த்து தீபா கதறி துடித்தார். அவரை சமாதானம் செய்து, குடும்பத்தினர் வீட்டிலேயே கோழியை அடக்கம் செய்தனர் .
பாசமாக வளர்த்த கோழி பரிதாபமாக உயிரிழந்ததை நினைத்து குடும்பத்தினர் சோகமாக உள்ளனர்.