தென்மாநிலங்களை மிரட்ட வரும் கனமழை..! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கனமழை பெய்ய இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிகத்தில் மழை ஓய்ந்திருந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை நிறைவடைந்துள்ளது. நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதனால் தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.
இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கனமழை பெய்ய இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக் கடல், தென் தமிழகத்தை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக கனமழை நீடிக்கும். இதேபோல் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.