செம குட்நியூஸ்... சிமெண்ட் விலையை எவ்வளவு குறைச்சியிருக்காங்க தெரியுமா?... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிமெண்ட் விலையை குறைப்பதாக தென்னிந்திய் சிமெண்ட் உற்பத்தியாளர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து கட்டுமான பொருட்கள் விண்ணை முட்டும் அளவிற்கு விலை உயர்ந்து வந்தது சாமானிய மனிதர்களை அச்சத்தில் ஆழ்த்தியது. தமிழ்நாட்டில் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் கடந்த சில வாரங்களில் மட்டும் 40% வரை உயர்ந்து வந்தது. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பு வரை ரூ.370 ஆக இருந்த ஒரு மூட்டை சிமெண்ட் விலை, ரூ.490 வரையிலும், ஒன்றரை அங்குல ஜல்லி ஒரு யூனிட்டின் விலை 3,400 ரூபாயிலிருந்து ரூ.3900 ஆகவும், முக்கால் அங்குல ஜல்லியின் விலை 3,600 ரூபாயிலிருந்து ரூ.4100 ஆகவும் உயர்ந்துள்ளன. எம் - சாண்ட் ஒரு யூனிட் விலை 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாகவும், கட்டுமானக் கம்பி ஒரு டன் ரூ. 68 ஆயிரமாகவும், ஒரு லோடு செங்கல் ரூ. 24 ஆயிரமாகவும் அதிகரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவுகள் காற்றில் பறந்தது. இதுகுறித்து கட்டுமான பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் படி சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களின் உற்பத்தியாளர்களை இது தொடர்பாக அழைத்துப் பேசியிருப்பதாகவும், விலைகளை குறைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருப்பதாகவும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஏற்கனவே தெரிவித்தார்.
இதையடுத்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிமெண்ட் விலையை குறைப்பதாக தென்னிந்திய் சிமெண்ட் உற்பத்தியாளர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ரூ.490க்கு விற்கப்பட்டு வந்த சிமெண்ட் மூட்டை விலை தொழில்துறை அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து ரூ.460 ஆக குறைக்கப்பட்டது. விலை மேலும் குறைக்கப்படும் என்று சிமெண்ட் உற்பத்தியாளர்கள் அமைச்சரிடம் உறுதி அளித்திருந்த நிலையில், தற்போது முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று மேலும் மூட்டைக்கு ரூ.25 வரை சிமெண்ட் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளனர்.
அதேபோல் கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் 10, 8 M.M TMT கம்பி ஒரு டன் விலை 69,000-லிருந்து ரூ.68,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலை அடுத்து ஜி.எஸ்.டி. உள்பட ஒரு டன்னுக்கு ரூ.1,180 குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.