"ஆம்புலன்ஸ் வரல.. எந்த வாகனமும் உதவி செய்யல.. அந்த பொண்ண கையில தான் தூக்கிட்டு போனோம்".. உயிரிழந்த சுபஸ்ரீயை காப்பாற்ற முயன்றவர் வேதனை!!
அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர் விழுந்து படுகாயத்துடன் கிடந்த சுபஸ்ரீயை 100 மீட்டர் வரையில் கையில் தான் தூக்கிச் சென்றோம் என்று அவரை காப்பாற்ற முயன்றவர் தெரிவித்துள்ளார்.
சென்னை குரோம்பேட்டைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23 ). நேற்று மாலை இவர் பள்ளிக்கரணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது அதிமுக சார்பாக அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி எறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நடந்த போது, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த பெண்ணை காப்பாற்ற முயன்ற மணிகண்டன் என்பவர் கூறும் போது, அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் எதுவும் சரியாக கட்டப்படவில்லை. அது சரிந்து விழுந்ததால் தான் அந்த பெண் உயிரிழந்தார் என்றார். லாரி டிரைவர் எவ்வளவோ முயற்சி செய்தும் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், அதனால் லாரி சுபஸ்ரீ மீது ஏறி இறங்கியது என்று கூறினார்.
மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால் சாலையில் வந்த வாகனங்களை உதவிக்கு அழைத்தும் யாரும் நிற்கவில்லை. இதனால் ரத்தவெள்ளத்தில் கிடந்த அந்த பெண்ணை 100 மீட்டர் வரையிலும் கையில் தான் தூக்கிச் சென்றோம் என்றார்.
இறுதியாக ஒரு ஆட்டோவில் ஏற்றிச் சென்றபோதும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்று வேதனையோடு தெரிவித்தார்.