#Breaking: தமிழகத்தில் மே 10 முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு.. புதிய அரசு அதிரடி உத்தரவு..!
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் 10ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ளது. தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தை எட்டிவிட்டது. சென்னையில் பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் உள்ளன. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதேபோல அத்தியாவசிய கடைகள் தவிர்த்து பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையே புதிதாக மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நேற்று பொறுப்பேற்றது. நேற்று மாலை மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனாவைக் கட்டுபடுத்த தீவிர நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் மே 10 முதல் 24 வரை இரண்டு வார காலத்துக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு இன்று உத்தரவிட்டது. இதன்படி தமிழகம் முழுவதும் முழு ஊரங்கு தீவிரமாக அமலாகிறது.
இந்த இரண்டு வாரத்தில் பொது போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் முழுமையாக இரு வாரங்களுக்கு மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவையான மளிகை, காய்கறி, பாலகங்கள், மருந்தகங்கள், விவசாயம் சார்ந்த கடைகள் போன்றவை மதியம் 12 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.