கொரோனாவால் பலியான மருத்துவர் உடலை எரிக்க எதிர்ப்பு இல்லை..! மின்மயானத்தில் நடந்த உண்மை நிலவரம்..!
இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி மருத்துவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை எரியூட்டுவதற்காக சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்று அம்பத்தூர் மின் மயானத்திற்கு மருத்துவமனை ஊழியர்களும் சுகாதரத்துறையினரும் கொண்டு சென்றனர்.உடலைக் கொண்டு சென்ற ஊழியர்கள் அனைவரும் கொரோனா நோய்தொற்று ஏற்படாதவாறு முறையான பாதுகாப்பு கவச உடையணிந்திருந்தனர். ஆனால் மின் மயான பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவரின் உடலை எரிக்க அவர்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக சுகாதரத்துறையினருக்கும் மின்மயான பணியாளர்களுக்கும் வாக்குவாதம் நடைபெற்று இருக்கிறது. ஒரு கட்டத்தில் சடலத்தை மின்மயானத்தில் வைத்துவிட்டு ஆம்புலன்சில் வந்தவர்கள் கிளம்பி இருக்கின்றனர்.
இது அப்பகுதி மக்களுக்கு தெரியவரவே அதிர்ச்சியடைந்த அவர்கள் 200 மேற்பட்டோர் ஒன்றாக சேர்ந்து மின்மயான பணியாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த அம்பத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பொதுமக்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மருத்துவரின் சடலம் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின் அங்கிருந்து மருத்துவரின் சொந்த ஊரான நெல்லூருக்கு சடலம் கொண்டு சென்று எரியூட்ட முடிவு எடுக்கப்பட்டது.