பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு... டிஜிபி திரிபாதி அதிரடி..!
முதலமைச்சர் உள்ளிட்ட விஐபிக்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்து டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதலமைச்சர் உள்ளிட்ட விஐபிக்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்து டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் பெண் காவலர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு சில பணிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. குறிப்பாக கர்ப்பக் காலத்தில் இருக்கக் கூடிய பெண் காவலர்களுக்கும், ஆண் காவலர்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அதிக பணிச்சுமை உள்ள பணிகளையோ அல்லது களத்திற்கு நேரடியாக சென்று பணியாற்றக் கூடிய பணிகளையோ ஒதுக்க வேண்டாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் செல்லும் இடங்களில் பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவ்வாறு சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போது குடிநீருக்கும், இயற்கை உபாதிகளை கழிக்க வசதி இல்லாததால் பெண் காவலர்கள் சிரமங்கை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், சாலைகளில் பாதுகாப்பு பணியில் வழிநெடுக்கிலும் பெண் காவலர்கள் காத்திருப்பதை தவிர்த்து அவர்களுக்கு வேறு பணி வழங்க காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, முதலமைச்சர் உள்ளிட்ட வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கவும், சாலைகளில் பெண் காவலர்களை நீண்ட நேரம் நிற்க வைக்க வேண்டாம் எனவும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி. திரிபாதி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.