சென்னை வந்த 78 ஆயிரம் டோஸ் தடுப்பு மருந்துகள்... தமிழகத்தில் தடுப்பூசி விநியோகம் தீவிரம்...!
இன்று பிற்பகல் மும்பையிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 7 பாா்சல்களில் 220 கிலோ தடுப்பூசி மருந்துகள் வந்தன.
தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா 2வது அலையை சமாளிக்கும் விதமாக தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலும் சற்றே குறைந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகவும் முக்கியமானது என தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.
எனவே 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கும், முன்னுரிமை அடிப்படையில் 18 முதல் 45 வயதிற்குட்பட்ட நபர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி முகாம்கள் மூலம் கோவிட் தடுப்பூசி தமிழ்நாடு அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
அதோடு அரசுடன் இணைந்து தனியாா் மருத்துவமனைகள், தனியாா் தொழிற்சாலைகள் தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றன. அதற்கு தடுப்பூசிகள் அதிக அளவில் தேவைப்படுகிறது. அதனால் மத்திய அரசு கூடுதலாக தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று பிற்பகல் மும்பையிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 7 பாா்சல்களில் 220 கிலோ தடுப்பூசி மருந்துகள் வந்தன. அதில் 78,240 டோஸ்கள் கோவிசீல்டு தடுப்பூசிகள் வந்தன. இந்த தடுப்பூசிகள் சென்னை மற்றும் வேலூரில் உள்ள 3 தனியாா் மருத்துவமனைகளுக்கு வந்துள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து சென்னை விமானநிலைய அதிகாரிகள் தடுப்பூசி பாா்சல்களை பிரித்து தனித்தனி குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனா்.