#BREAKING போலி சானிடைசர் தயாரித்த 82 நிறுவனங்கள்... மருந்து கட்டுப்பாடு இயக்ககம் அதிரடி விசாரணை...!
கொரோனா காலத்தில் உயிர் காக்கும் கவசமாக இருக்கும் சானிடைசரை போலியாக தயாரித்ததாக 82 நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை கையை மீறி போய்விட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக இதனால், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேர்வுகள் ரத்து, பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை, ஆட்டோக்களில் இரண்டு பேர்கள் மற்றும் கார்களில் மூன்று பேர்கள் மட்டுமே செல்ல அனுமதி உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அப்படி இருந்த போதிலும் பாதிப்பு குறையாமல் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
முகக்கவசம் அணிவது கட்டாயம், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதிலும் முக்கியமாக சோப்பு போட்டு அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். தண்ணீர் மற்றும் சோப்பு இல்லையென்றால், ஆல்கஹால் சார்ந்த சானிடைசரை உபயோகித்து வருகின்றனர்.
இப்படி கொரோனா காலத்தில் உயிர் காக்கும் கவசமாக இருக்கும் சானிடைசரை போலியாக தயாரித்ததாக 82 நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் தரமற்ற மற்றும் போலி சானிடைசரை தயாரித்து விற்றதாக 82 நிறுவனங்களிடம் மருந்து கட்டுப்பாடு இயக்ககம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தொற்றிலிருந்து தங்களை பாதுகாக்கும் சானிடைசரில் கூட போலியை தயாரித்து விற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.