கருப்பு பூஞ்சை பற்றி கவலை வேண்டாம்.. விரைந்து செயல்பட்டால் நல்ல பலன்.. சிறப்பு மருத்துவ குழுவினர் தகவல்..!
முதலில், பாதிப்பு முற்றிய நிலையில் சிகிச்சைக்கு மக்கள் வந்தனர். தற்போது, ஆரம்ப நிலையிலேயே மக்கள் வருகின்றனர். பாதிப்பு உடனடியாக கண்டுபிடிக்கப்படுவதால், இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இந்த நோய் விவகாரத்தில் தமிழக அரசு வித்தியாசமான முறையை கையாள்கிறது.
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட குறைவு என சிறப்பு மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு குறித்து 11 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் இடைக்கால அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிறப்பு குழுவினர்;- தமிழகத்தில் இதுவரை 2,700 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 148 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட குறைவு.
தமிழகத்தில் தினசரி கருப்பு பூஞ்சை பாதிப்பு குறைந்து வருகிறது. கருப்பு பூஞ்சை நோயை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலில் மருந்து தட்டுப்பாடு இருந்தது. தற்போது இல்லை. சிகிச்சைக்கு மாற்று மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடுத்த அலை வந்தாலும் அதை சமாளிக்கும் திறன் நம்மிடம் உள்ளது. இந்த நோய் பாதிப்பை சமாளிக்க மருத்துவ துறை தயாராக உள்ளது. முதலில், பாதிப்பு முற்றிய நிலையில் சிகிச்சைக்கு மக்கள் வந்தனர். தற்போது, ஆரம்ப நிலையிலேயே மக்கள் வருகின்றனர். பாதிப்பு உடனடியாக கண்டுபிடிக்கப்படுவதால், இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இந்த நோய் விவகாரத்தில் தமிழக அரசு வித்தியாசமான முறையை கையாள்கிறது.
மேலும், தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில்தான் கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகம் உள்ளது. தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் தான் கருப்பு பூஞ்சை பாதிப்பு பதிவாகியுள்ளது. அதே வேளையில், சென்னைக்கு மிக அருகே இருக்கும் திருவள்ளூர், கள்ளக்குறிச்சி உள்பட 10 மாவட்டங்களில் இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை. கருப்பு பூஞ்சை உருமாற்றம் அடையாது. உலகிலேயே இந்தியாவில் தான் கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகம் எனவும் தெரிவித்துள்ளனர்.