சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க கோரி மனு அளித்தார். 

தமிழ்நாட்டில் ஒரு துளி போதைப் பொருள் கூட இருக்கக் கூடாது என்று ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க கோரி மனு அளித்தார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி: தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இப்படியே சென்றால் போதைப்பொருள் மாநிலமாக தமிழகம் மாறிவிடும் என்பதை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம். தமிழ்நாட்டில் ஒரு துளி போதைப் பொருள் கூட இருக்கக் கூடாது என்று ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். 

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்கவில்லை. இளைஞர்கள், மாணவர்கள் பெருமளவு போதைப் பொருளால் பாதிக்கப்படுகின்றனர். இதே நிலை நீடித்தால் மக்கள் வாழ்க்கை சீரழியும். அண்மையில் கைதான ஜாபர் சாதிக் கடந்த 3 ஆண்டுகளாக கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தோம். காவல்துறை செயல்பாடு சந்தேகமாக உள்ளது. போதைப்பொருள் புழக்கத்திற்கு திமுக தார்மீக பொறுப்பேற்க வேண்டும். 

திமுக போதைப்பொருள் விற்பனை செய்து கிடைத்த பணத்தை தேர்தலில் செலவிட உள்ளது. மடியில் கனம் இருப்பதால் திமுகவிற்கு பயம். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஜாபர் சாதிக் உடன் முதல்வர் ஸ்டாலின் தொடர்பில் இருந்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என இபிஎஸ் கூறியுள்ளார்.