அடடே.. அசத்தல் அறிவிப்பு.. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு... தமிழக அரசு அதிரடி...!
தற்போது தனியார் பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு வர தேவையில்லை என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும் அலுவல் பணிகள் காரணமாக ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று வரவேண்டிய சூழல் இருந்தது.
இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் மே 1ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என இரு தினங்களுக்கு முன்பு தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதேபோல் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருவதால் மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு அழைக்க கூடாது என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.
அதேபோல் கல்லூரி பாடங்களையும் ஆன்லைன் வழியாக நடத்த உத்தரவிட்டுள்ளதால் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர்களையும் கல்லூரிக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனாலும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது தனியார் பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு வர தேவையில்லை என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி அறிவித்துள்ளார். மே 1ம் தேதி முதல் தனியார் பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு வரத்தேவையில்லை என்றும், அரசு பிறப்பித்த உத்தரவு அரசு பள்ளிக்கு மட்டுமல்ல தனியாருக்கும் பொருந்தும் என்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.