தமிழகத்தில் இனி இந்த நடைமுறை இல்லை... அரசின் அதிரடி அறிவிப்பு...!
பெண் காவலர்களை இனி சாலையோர பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் பயணங்களின் போது பாதுகாப்பு பணிக்காக சாலையோரம் பெண் காவலர்கள் நிறுத்தப்பட்டு வருகின்றனர். அப்படி பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போது சந்திக்கும் பிரச்சனைகளும், சிக்கல்களும் ஏராளம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாளில் இருந்தே மகளிர் நலனில் தனி கவனம் செலுத்தி வருகிறார். மகளிர், திருநங்கைகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச சேவை உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் பெண் காவலர்களை இனி சாலையோர பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக முதல்வர் அலுவல் ரீதியாக செல்கையில் காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறார்கள். இவர்களில் பெண் காவல் அதிகாரிகள் இனி வரும் நாட்களில் முதல்வரின் பயணங்களின் போது சாலையோரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டாம்.
அவர்களை சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் சாலையோரத்தில் நிற்க வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறகனவே கர்ப்பிணி காவலர்களுக்கு அதிக பணிச்சுமை, களத்திற்கு சென்று பணி செய்தல் போன்ற வேலைகளை ஒதுக்க வேண்டாம் என காவல்துறைக்கு தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதால் பெண் காவலர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் அவரை பாராட்டி வருகின்றனர்.