இப்படியே போச்சுனா தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நிச்சயம்... பீதியை கிளப்பும் ராதாகிருஷ்ணன்..!
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் கொரோனா பரவல் மோசமாக உள்ளது என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் கொரோனா பரவல் மோசமாக உள்ளது என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் 8ம் ஆண்டு துவக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவமனை இயக்குனர் விமலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழகத்தில், கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், அண்டை மாநிலங்களில், பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, எல்லை மாவட்டங்களில், கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகிறோம். காய்ச்சல் என்றாலே, பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பாதிப்பு இல்லை என்றாலும், ஓசூர் மற்றும் திருவள்ளூர், சித்துார் பகுதிகளில், காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
மேலும், சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே நேரத்தில் தொற்று உறுதியாவது அதிக அளவில் காண முடிகிறது. மேலும், பாதிப்பு யாருக்கு வந்தது. எப்படி வந்தது, ஒரே நிகழ்வில் பங்கேற்றவர்களா என கண்டறிந்து நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்கிறோம். இது மேலும் தொடர்ந்தால் சமீபத்தில் மகாராஷ்டிராவில் ஊரடங்கு போடப்பட்டதை போல தமிழகத்திலும் போடப்படும் என எச்சரித்தார்.
இதனிடையே, தென் மாவட்டங்களில், ஆங்காங்கே டெங்கு நோய் பரவ தொடங்கியுள்ளது. தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் சிலருக்கு, டெங்கு கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசி பெறுவதற்கு, சுகாதார பணியாளர்களுக்கு, அரசு அறிவித்த முன்னுரிமை முடிவடைகிறது. ஆனாலும், முதியவர்களுக்கு தடுப்பூசி போட ஆரம்பிக்கும் வரை சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.