கடலுக்கு செல்லலாம்.! மீனவர்கள் வயிற்றில் பால்வார்த்த தமிழக அரசு..!
அத்தியாவசிய தேவைகள் அன்றி வேறு காரணங்களுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளி வரக்கூடாது என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் நாட்டுப் படகுகள் மற்றும் இயந்திரம் பொருந்திய நாட்டுப் படகுகளில் தொடர்ந்து மீன் பிடிக்கலாம் என தமிழக அரசு தற்போது அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக தமிழக மீன்வளத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ஊரடங்கு காலத்தில் மீன் பிடித்தலுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரும் நிலையில் விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதியில்லை. எனினும் நாட்டுப்படகுகள், இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகளில் மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்க செல்லலாம்.
மீன்பிடி இயங்குதளம், துறைமுகம், கடற்கரைப் பகுதிகளில் மீன்களை பொது ஏலத்திற்கு விடக்கூடாது. மீன் பிடித்தல், மீன் இறக்குதல் உள்ளிட்டவைகளுக்கு குறைந்த அளவிலான நபர்களையே ஈடுபடுத்த வேண்டும். படகு உரிமையாளர்கள் மீனவர்களுக்குத் தேவையான முகக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் வழங்க வேண்டும். தினமும் எத்தனை படகுகள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் என்பதை சம்பந்தபட்ட கடலோர மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு முடிவு செய்யும். இவ்வாறு தமிழக மீன்வளத்துறை தெரிவித்திருக்கிறது. முன்னதாக மீன் பிடி தொழிலுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.