எஸ்பிஐ ஏடிஎம்மில் கள்ளநோட்டுக்கள்
நாமக்கலில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம்மில் இருந்து வரிசையாக 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கலில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம்மில் இருந்து வரிசையாக 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்தவர் மூர்த்தி. சேந்தமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் முதல்நிலை முகவராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், மூர்த்தி, நேற்று இரவு நாமக்கல் சங்கரன் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையத்தில் ரூ.40 ஆயிரம் எடுத்துள்ளார். அதில், 2000 ரூபாய் நோட்டுக்கள் 5 ஒட்டப்பட்ட கள்ள நோட்டுக்களாக வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அருகே உள்ள எஸ்பிஐ வங்கியில் புகார் அளிக்க சென்றார். அப்போது, அங்கிருந்த அதிகாரிகள் மூர்த்தியிடம் வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்துவிட்டு மறுநாள் வரும்படி கூறியுள்ளனர். மேலும், வங்கியின் நுழைவாயிலை பூட்டினர்.
இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி, ஒட்டப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுக்களை நுழைவாயிலின் முன்பு வைத்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மூர்த்தியிடம் சமரசம் பேசினர். பின்னர் அவரை, வங்கிக்குள் அழைத்து சென்று, வங்கி அதிகாரிகள் முன்னிலையில் மூர்த்தியிடம் புகாரை பெற்று கொண்டனர். அதேபோல் பணத்தை பெற்று கொண்ட வங்கி அதிகாரிகள், ஒட்டப்பட்ட நோட்டுக்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும், மூர்த்தி எடுத்த ரூ.10 ஆயிரத்தை திருப்பி தருவதாகவும் கூறினர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட மூர்த்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.