வீட்டிற்கே வந்து தடுப்பூசி... சென்னை மாநகராட்சி அதிரடி...!
சென்னையில் தடுப்பூசி போடும் எண்ணிக்கையை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் வேகம் படுதீவிரமடைந்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக முதலமைச்சர் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசி கொள்முதல் செய்ய முடிவெடுத்த தமிழக அரசு உலகளாவிய டெண்டர் கோரியுள்ளது. 5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.
வீட்டு வாசலுக்கே வந்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சென்னையில் நாளோன்றுக்கு 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் தடுப்பூசி போடும் எண்ணிக்கையை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் பதிவு செய்வதற்காகத் புதிய தளம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை இணை ஆணையர் ஆல்பி ஜான் தனது ட்விட்டரில், "நீங்கள் வசிக்கும் இடத்தில் உங்களால் தடுப்பூசி போட 45 வயதுக்கு மேல் உள்ள 30 பேரை ஒருங்கிணைக்க முடியுமா? ஒரு நிறுவனம், அடுக்குமாடிக் குடியிருப்பு நலச் சங்கம் அல்லது எந்தவொரு குழுவும் 30க்கும் மேற்பட்ட (45 வயதுக்கு மேற்பட்ட) நபர்களை அணி திரட்ட முடிந்தால், தயவுசெய்து இந்தப் படிவத்தை நிரப்பவும். சென்னை மாநகராட்சி ஒரு தடுப்பூசி முகாமை அமைத்துத் தரும்" எனத் தெரிவித்துள்ளார்.