குட்நியூஸ்.. முழு ஊரடங்கால் கொரோனா பரவல் விகிதம் குறைகிறது.. சுகாதாரத்துறை செயலாளர் தகவல்..!
தமிழகத்தில் முழுஊரடங்கு அமலுக்கு பிறகு கொரோனா பரவல் விகிதம் குறைய தொடங்கியுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் முழுஊரடங்கு அமலுக்கு பிறகு கொரோனா பரவல் விகிதம் குறைய தொடங்கியுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் தொற்றின் வேகம் குறையவில்லை. பின், வேறு வழியில்லாமல் கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரம்பூரில் அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் அரசு புறநகர் மருத்துவமனையில் புதிய கொரோனா அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்தனர்.
பின்னர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் படிப்படியாக உயர்ந்து வந்த கொரோனா பரவல் விகிதம், கடந்த சில நாட்களாக முழு ஊரடங்குக்கு பிறகு பரவல் விகிதம் குறைந்துள்ளது. மக்களுக்கு எந்தவித பாதிப்பு இன்றி கொரோனா பரவலை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றோம்.
இணை நோய்கள் இல்லாத இளைஞர்கள் உயிரிழக்க காரணம் அறிகுறிகள் தெரிந்த உடனே சிகிச்சை எடுக்காததுதான். இந்த விழிப்புணர்வை தான் சுகாதாரத்துறை செய்கிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. ராஜூவ்காந்தி, ஸ்டான்லியில் இடம் நெருக்கடியை குறைக்க பெரம்பூர் அரசு மருத்துவமனையில் படுக்கை அதிகரிக்கப்படும் என்றார்.