எகிறும் பாதிப்புகளால் திணறும் தலைநகர்..! சென்னையில் கொடூரம் காட்டும் கொரோனா..!
நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து தலைநகரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,117 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை மாநகர் முழுவதும் தீவிர முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் உச்சம் அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,740 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 7,270 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 4,406 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் 81 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கி இருக்கிறது. தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் சென்னையில் எகிறும் வரும் பாதிப்பு தற்போது 7 ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து தலைநகரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,117 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை மாநகர் முழுவதும் தீவிர முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதும் பல மாவட்டங்களில் தளர்வுகள் அளித்திருக்கும் அரசு, சென்னையில் பழைய கட்டுப்பாடுகளே தொடரும் என அறிவித்திருந்தது. இதனிடையே சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்புகளை தினமும் மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. அதன்படி மொத்தமிருக்கும் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளது. அங்கு இன்றைய நிலவரப்படி 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக கோடம்பாக்கத்தில் 1,077 பேருக்கும், திரு.வி.க.நகரில் 835 பேருக்கும், தேனாம்பேட்டையில் 786 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 610 பேருக்கும், அண்ணா நகரில் 586 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அதே போல வளசரவாக்கத்தில் 532 பேர், அடையாறில் 391 பேர், அம்பத்தூரில் 321 பேர் கொரோனாவால் பாதிப்படைந்து தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். திருவொற்றியூரில் 161 பேருக்கும், மாதவரத்தில் 133 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 101 பேருக்கும், மணலியில் 93 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. மேலும் பெருங்குடியில் 92 பேர், ஆலந்தூரில் 84 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனர். நகரில் பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.