தமிழகத்தில் கொரோனா 2வது அலை கைமீறிவிட்டதா? சுகாதாரத்துறை செயலாளர் பரபரப்பு விளக்கம்..!
தமிழகத்தில் கொரோனா 2வது அலை கைமீறிவிட்டதாக கூறப்பட்ட தகவல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை கைமீறிவிட்டதாக கூறப்பட்ட தகவல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கொரோனா தொடர்பான வழக்கு ஒன்று விசாரணையின் போது, தலைமை நீதிபதியின் முன்பு ஆஜரான அரசு வழக்கறிஞர் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருவதாகவும், கடந்தாண்டை விட மோசமாக இருப்பதாகவும் கூறினார். இதனிடையே, கொரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில் நீதிமன்றம் ஏதேனும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளதா..? என்று அரசு வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி கேள்வி எழுப்பினார். ஆனால், கொரோனா தொற்று பரவல் கையை மீறி சென்று விட்டதாகவும், அதேநேரத்தில் போதிய அளவிலான தடுப்பூசி இருப்பில் இருப்பதாகவும் கூறினார்.
மேலும், மருத்துவ ரீதியான பிரச்சனை என்பதால், முழு விபரம் அளிக்க சுகாதாரத்துறையினர் நீதிமன்றத்திற்கு வந்து விளக்கம் கொடுக்க இருப்பதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை நீதிபதியும் ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து, இன்று பிற்பகல் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ நிபுணர்கள், நீதிபதியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர்;- கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி நீதிபதியிடம் விளக்கினேன். நீதிமன்றங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி தலைமை நீதிபதி முடிவெடுப்பார். தமிழகத்தில் கொரோனா 2வது அலை கைமீறிவிட்டதாக கூறப்பட்ட தகவல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் அதிகமானால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி நாளை தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்த உள்ளோம் என்று கூறினார்.