அசத்தல் திட்டங்கள் மூலம் அதிரடி காட்டும் எடப்பாடி .. - டாப் கியரில் செல்லும் அதிமுக அரசு ..
நேற்று ஒரே நாளில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி .
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்காக அரசின் சார்பாக தனியாக தொலைக்காட்சி ஒன்று தொடங்க முடிவு செய்யப்பட்டிருந்தது . இதற்கான பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தது . கடந்த சில மாதங்களாக இதற்கான சோதனை ஓட்டங்கள் நடந்து வந்தது . சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "கல்வித் தொலைக்காட்சி" என்கிற பெயரில் செயல்படும் என்று அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டது .
இந்த நிலையில் கல்வித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடக்க விழா நேற்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது . முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் .
கல்வியாளர்களின் கலந்துரையாடல்கள் , மாணவர்களின் கண்டுபிடிப்புகள் போன்றவை இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட இருக்கிறது .மழலையர் கல்வி தொடங்கி பட்டப்படிப்பு வரை கல்வி சம்பந்தமான அனைத்து தகவல்களும் ஒளிபரப்ப இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறினார் .
சென்னையில் மின்சார பேருந்துகளின் சோதனை முறை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது . சென்னை சென்ட்ரலில் இருந்து திருவான்மியூர் வரை இருக்கும் 28 கிலோமீட்டர் தூரம் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட இருக்கிறது . முழுவதும் குளிர்சாதனை வசதி கொண்ட இந்த பேட்டரி பேருந்தில் 32 பேர் அமர்ந்தும் 25 பேர் நின்றும் பயணிக்கலாம். இந்த சேவையை முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார் .
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . அதற்காக குற்றத்தடுப்புப் பிரிவு தமிழகத்தில் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டது. இதன் ஒரு கட்டமாக குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக ‘அம்மா ரோந்து வாகனம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘அம்மா பேட்ரோல்’ என்ற பெயரில் புதிய ரோந்து வாகன சேவையை நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அதிக விளைச்சலால் தேக்கமடையும் தக்காளியை கூழாக்கும் இயந்திரம் கொண்ட பிரத்யேக வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இது முதன்முதலில் தொடங்கப்பட்டுள்ளது . இந்த சேவையும் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது .