தலைநகர் சென்னையை அலறவிடும் கொரோனா..! மண்டல வாரியாக எகிறும் பாதிப்பு..!
தமிழகத்தில் தலைநகர் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தைக் கடந்திருக்கும் நிலையில் 872 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அசுர வேகமெடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தலைநகர் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இருக்கும் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக வடசென்னையின் ராயபேட்டையில் 145 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
திரு.வி.க.நகரில் 85 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 65 பேருக்கும், தேனாம்பேட்டையில் 55 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 54 பேருக்கும், அண்ணா நகரில் 45 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அதே போல வளசரவாக்கம், அடையாறில் தலா 17 பேருக்கும், திருவொற்றியூரில் 14 பேருக்கும், ஆலந்தூரில் 9 பேருக்கும், பெருங்குடியில் 8 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மாதவரத்தில் 3, அம்பத்தூர், சோழிங்க நல்லூரில் 2 மற்றும் மணலியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்துள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதையடுத்து 168 இடங்கள் தனிமைப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ராயபுரத்தில் 46 இடங்களும் திருவிக நகரில் 28 இடங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தேனாம்பேட்டையில் 26, தண்டையார்பேட்டையில் 22, கோடம்பாக்கத்தில் 9, திருவொற்றியூரில் 8, வளசரவாக்கம் பகுதியில் 7 இடங்கள் இடங்கள் தனிமைப்படுத்தபட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 17ம் தேதியில் 84 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று 168 இடங்களாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.