கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் உடலை வேலங்காடு மயானத்தில் இருந்து எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மீண்டும் அடக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் உடலை வேலங்காடு மயானத்தில் இருந்து எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மீண்டும் அடக்கம் செய்ய சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த ஆண்டு மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலிஸின் உடலை, கடந்த ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டம் மற்றும் வேலாங்காடு பகுதிகளில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதுடன், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதில், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் படுகாயமடைந்தனர். பின், மருத்துவர் சைமனின் உடல், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட சைமனின் உடலை உடலை தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரி அவரது மனைவி ஆனந்தி, சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதை பரிசீலித்த சென்னை மாநகராட்சி ஆணையர், ஆனந்தியின் கோரிக்கையை நிராகரித்து கடந்த ஆண்டு மே 2ஆம் தேதி பிறப்பித்த உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வேலங்காடு மயானத்தில் இருந்து மருத்துவர் சைமனின் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்திலேயே மீண்டும் அடக்கம் செய்யவேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த உத்தரவில், உடலை தோண்டி எடுத்து, மறு அடக்கம் செய்யும் போது, உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும், போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும், வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.