வேகமெடுக்கும் கொரோனா பரவல்... தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
தேர்தல் நடவடிக்கைகளின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மற்றொருபுறம் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் தீயாய் அதிகரித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் பொதுக்கூட்டம், பிரசாரம் என மக்கள் அதிக அளவில் கூடுவதாலும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது.
தேர்தல் பரப்புரை மற்றும் வாக்குப்பதிவின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்ற வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, தொண்டன் சுப்ரமணியன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கொரோனா தொற்றின் 2வது அலை பரவ ஆரம்பித்துள்ளது. தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
தேர்தல் பரப்புரைக்காக செல்லும் போது வாக்கு சேகரிப்பில் மட்டும் ஈடுபடாமல் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வையும் வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்துங்கள் என்றும் கூறியுள்ளனர். வாக்குப்பதிவு நாளான்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்ற தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, தொண்டன் சுப்ரமணியன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர். தேவைப்படும் பட்சத்தில் ஊடகங்கள் மூலமாகவும் கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்களை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர்.