கொரோனாவால் நீதிபதி மரணம்... கீழமை நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!
தமிழகத்தில் கொரோனா பரவல் தீயாய் அதிகரித்து வரும் நிலையில் கீழமை நீதிமன்றங்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கொரோனா முதல் அலையை விட 2வது அலையில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முக்கிய வழக்குகள் மட்டும் காணொலி காட்சி மூலமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் காணொலியில் வழக்குகளை விசாரிக்க அனுமதிக்க கோரி தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் நெல்லை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ் கொரோனா தொற்றால் காலமானார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகளும் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நிறுத்திவைக்க வேண்டும்.
கைதிகளை சிறையில் அடைப்பதற்கான நடைமுறையை தவிர்த்து மற்ற பணிகள் நிறுத்திவைக்கப்படுகிறது என்றும், அனைத்து கீழமை நீதிமன்ற வளாகங்களிலும் வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் வர தடைவிதிக்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிபதிகளின் முன் அனுமதியைப் பெற்ற பிறகே நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்றும், தேவையின்றி நீதிபதிகள், நீதித்துறை ஊழியர்கள் நீதிமன்றக் கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.