மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி... தமிழக அரசின் செயலால் உயர் நீதிமன்றம் அதிருப்தி...!
மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த கோரிய வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை தெளிவற்ற முறையில் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கொரோனா தாக்கும் அபாயம் உள்ளதால் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அறிக்கையை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகளில் பலவகையினர் இருப்பதாகவும், அவர்களுக்கு எப்படி தடுப்பூசி செலுத்தப்படும் என எந்த தகவலும் இல்லை எனவும், அரசின் அறிக்கை தெளிவற்றதாக இருப்பதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், சென்னையில் மட்டும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தப்படுவதாக அறிக்கையில் கூறியுள்ளதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், ஒரு நபருக்கு தடுப்பூசி போடுவதாக இருந்தாலும், அவர் இருக்கும் இடத்தை அடைந்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
பல்வேறு வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு எப்படி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்பது குறித்தும், அதிகாரிகளுக்கான அறிவுறுத்தல்கள் குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அறிவுறுத்தி, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.