தமிழகத்தில் சிகிச்சை இல்லாமல் கொரோனா தொற்று பாதித்தவர்கள் மரணமடைந்ததாக எந்த புகாரும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை கண்காணிக்க உத்தரவிடக் கோரி திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அவர் தனது மனுவில், கொரோனா தொற்று பாதித்த போது, மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சையின் போது எந்த மருத்துவரும், நர்சும் கொரோனா வார்டுக்கு வரவில்லை என்றும், இதே நிலை நீடித்தால் கொரோனாவிற்கு பலியாவதை விட, மருத்துவர்கள், நர்ஸ்கள் அஜாக்கிரதையால் பலியாகி விடுவர் என்றும் கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ஏற்கனவே கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து வருவதாகவும், இரண்டாவது அலை தணிந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், ஆரம்பத்தில் படுக்கை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்த போதும், தற்போது வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், சிகிச்சையில்லாமல் கொரோனா தொற்று பாதித்தவர் உயிரிழந்தார் என எந்த புகாரும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.