சென்னையில் திடீரென அதிகரிக்கும் கொரோனா... பிரபல உணவக ஊழியர்கள் 4 பேருக்கு தொற்று?
சென்னையில் உள்ள பிரபல ஸ்வீட்ஸ் மற்றும் உணவக கடையில் பணியாற்றிய 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பித்த கொரோனாவின் கோரதாண்டவம் இன்றும் பல நாடுகளை விட்டு அகலவில்லை. உருமாறிய கொரோனா வைரஸ், இரண்டாம் அலை என மக்கள் மத்தியில் விதவிதமான பீதி எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றிற்கு தடுப்பூசி கிடைக்காமல் திண்டாடிய நிலையில், சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்புப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 3 கோடி முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு அந்த பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக தகுதியானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள அடையாற்றை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பிரபல ஸ்வீட்ஸ் மற்றும் உணவக நிறுவனத்தில் பணியாற்றும் 4 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊழியர்கள் 4 பேரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.