கொரோனா 3வது அலையே வந்தாலும் நாங்க ‘ரெடி’... சென்னை மாநகராட்சியின் மிரள வைக்கும் வியூகம்...!
கொரோனா 2வது அலையையே முற்றிலும் குறையாத நிலையில், 3வது அலையை சமாளிப்பதற்கான பணிகளில் சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.
தமிழகத்தில் தலைவிரித்தாடிய கொரோனா 2வது அலையின் வேகம் படிப்படியான நடவடிக்கைகளால் தற்போது சற்றே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தளர்வுகளற்ற முழு ஊரடங்கால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. எனவே சற்றே தளர்வுகளுடன் ஜூன் 21ம் தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா 2வது அலையையே முற்றிலும் குறையாத நிலையில், 3வது அலையை சமாளிப்பதற்கான பணிகளில் சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. உலக நாடுகளில் 3வது அலையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அலசி ஆராய்ந்து, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் வசதி உள்ளிட்ட அவசர சிகிச்சை மையங்களை கட்டமைக்க, கொரோனா சிகிச்சை மையங்களை தீவிர சிகிச்சை பிரிவாக மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காய்ச்சல் முகாம்களை அதிகரிக்கவும், மக்களை தினந்தோறும் சந்திக்கும் வியாபாரிகள், சிறு குறு தொழில் செய்பவர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா எதிர்ப்பு சக்தி மக்களிடம் அதிகரித்துள்ளதா? என்பது குறித்து சர்வே நடத்தவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கார் ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை அதிகரிப்பது, தொலைபேசி மூலமாக மருந்துவர்கள் ஆலோசனை சேவையை தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாநகராட்சியின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுத்து, விதிமுறைகளைப் பின்பற்றினால் கொரோனா 3வது அலையை எதிர்கொள்வது கூட எளிதானது என மருந்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.