“இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தாலே உடனே ஹாஸ்பிட்டல் போங்க”... பகீர் கிளப்பும் சென்னை மாநகராட்சி ஆணையர்...!
ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை பரிசோதிப்பதன் மூலம் கொரோனா தொற்றை கண்டறியலாம் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா தொற்றின் வேகம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்: நாட்டில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவுகிறது. குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாஸ்க் அணியாததால்தான் கொரோனா அதிகரிப்பதால் சென்னை மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். லேசான அறிகுறிகள் இருந்தாலே உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வாசனை தெரியாதது, வயிற்றுப்போக்கு, அதிக சோர்வு ஆகிய அறிகுறிகள் இப்போது கொரோனா தொற்றில் தென்படுகின்றன. இந்த மாதிரியான அறிகுறிகள் யாருக்கு இருக்கிறது என்பதை காய்ச்சல் கண்டறியும் தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீடாக சென்று பதிவு செய்து வருகின்றனர்.எவ்வித அறிகுறிகளும் இன்றி கொரோனா தொற்று பரவி வருகிறது. ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை பரிசோதிப்பதன் மூலம் கொரோனா தொற்றை கண்டறியலாம் என தெரிவித்துள்ளார்.
அதன் படி ஆக்ஸி மீட்டரில் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு 95க்கு கீழ் குறைந்தால் கவனமுடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கல் உடனடியாக அருகேயுள்ள காய்ச்சல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டு கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றனர். அங்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
மேலும், கொரோனா கண்காணிப்பு பணியில் 12,000 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். தலைவலி, காய்ச்சல், நுகர்வுத் தன்மை குறித்து தன்னார்வலர்கள் பரிசோதனை செய்கின்றனர். தற்போது சென்னையில் 50 காய்ச்சல் முகாம்கள் உள்ளன. இன்னும் 2-3 வாரங்களில் நாட்களில் 400 ஆக அவை அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.