மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி மையம் செல்ல சிறப்பு ஏற்பாடு... சென்னை மாநகராட்சி அதிரடி...!
மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி மையங்களுக்கு செல்ல ஏதுவாக சென்னை ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் 15 போர்ஸ் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் உள்ள 80,000 த்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போட ஏதுவாக பல்வேறு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 22 ம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மாற்றுதிறானளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார். அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் பணியையும் சுகாதாரத்துறையினர் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.
இருப்பினும் சில இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி மையங்கள் மூலமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி மையங்களுக்கு செல்ல சிரமம் உள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. எனவே சென்னை ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களுக்கும் 15 வாகனங்களை ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த 15 வாகனங்களையும் 15 மண்டல கட்டுப்பாட்டு மையங்கள் முறைப்படுத்தும் பணியில் ஈடுபடும் எனவும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தங்கள் பகுதிகளுக்கு வாகனங்கள் வேண்டும் என்றால் வாகனம் தடுப்பூசி மையத்திற்கு அழைத்து செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.மேலும், தேவைப்பட்டால் இந்த வாகனங்களும் நடமாடும் தடுப்பூசி வாகனங்களாக மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.