சென்னையில் மூதாட்டியின் சொத்தை அபகரிக்க முயற்சி… பா.ஜ.க. நிர்வாகி சிறையில் அடைப்பு…!
சென்னையில் மூதாட்டியின் சொத்தை அபகரிக்க முயற்சி… பா.ஜ.க. நிர்வாகி சிறையில் அடைப்பு…!
சென்னையில் வயதான பெண்மணியை மிரட்டி அவரது சொத்துகளை அபகரிக்க முயன்ற வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவான்மியூர் கண்ணப்ப நகர் விரிவாக்கம் பகுதியில் டெக்கன் நந்தினி வில்லா என்ற பெயரில் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள குடியிருப்பு உள்ளது. அதன் உரிமையாளரான அமர்பின் அகமது துபாயில் பணிபுரிவதால் சொத்தை அதிகாரம் செலுத்தும் உரிமையை அவரது மாமனாரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்பவருக்கு கொடுத்துள்ளார். வயது மூப்பால் ஜார்ஜ் உயிரிழந்துவிட சொத்துகளின் உரிமை அவரது மனைவி லீலா பெர்னாண்டஸ் வசமாகியது. இந்தநிலையில் தமது சொத்துகளை சிவ அரவிந்த் என்ற பா.ஜ.க. நிர்வாகி அபகரிக்க முயல்வதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் லீலா பெர்னாண்டனஸ் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், 2018-ல் குடியிருப்பை சிவ அரவிந்திற்கு மாத வாடகைக்கு விட்டதாகவும், 4 மாதங்கள் முறையாக வாடகை செலுத்திய அரவிந்த் பின்னர் கொடுக்க மறுத்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவ அரவிந்த் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரித்தபோது அவர், குடியிருப்பை மேல் வாடகைக்கு விட்டதும் லீலாவுக்கு தெரியவந்துள்ளது. மேலும் சிவ அரவிந்த் தம்மிடம்17 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாகவும் லீலா பெர்னாண்டஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேள்வி கேட்ட தம்மை ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்ததாக புகார் கூறியுள்ள லீலா பெர்னாண்டஸ், பா.ஜ.க. நிர்வாகியிடம் இருந்து பணம் மற்றும் சொத்தை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சிவ அரவிந்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.