எழும்பூரில் வீடியோ கேம் விளையாடும்போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் இருவர் ராஜாராமனை தாக்கியதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை எஸ்.ஐ.யாக இருப்பவர் ராஜாராமன் (53). இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் வார விடுமுறையில் நண்பர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் ராஜாராமன் கடந்த 18-ம் தேதி இரவு 8 மணியளவில் எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது அவரும், அவருடன் வந்திருந்த ராகேஷ், அய்யப்பன் ஆகியோரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விளையாடி விட்டு ராஜாராமன் வீட்டு கிளம்ப தயாரான நிலையில் அவருடன் ராகேஷ், அய்யப்பன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்து ராஜாராமன் மயங்கினார். மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த அவரை மீட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலில் அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து ராஜாராமன் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த வழக்கு கொலை வழக்கமாக மாற்றம் செய்யப்பட்டு நண்பர்கள் ராகேஷ், அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொலைவெறி தாக்குதலில் எஸ்.ஐ. உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.