சென்னையில் திடீரென 15 அடி ஆழத்தில் ராட்சத பள்ளம்... கடும் போக்குவரத்து நெரிசல்..!
சென்னை அண்ணாநகரில் சாலையில் திடீரென 15 அடி ஆழத்தில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை அண்ணாநகரில் சாலையில் திடீரென 15 அடி ஆழத்தில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை அண்ணாநகர் சாந்தி காலனி 4-வது அவென்யூ தெருவில் உள்ள சாலையின் நடுவே இன்று காலை திடீரென பள்ளம் விழுந்தது. 15 அடி ஆழத்திற்கு உருவான அந்தப் பள்ளத்தால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக உடனடியாக போக்குவரத்து காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பள்ளம் ஏற்பட்ட சாலையில் நின்றிருந்த அனைத்து வாகனங்களையும் மாற்று வழியில் அனுப்பி போக்குவரத்தை சரிசெய்தனர். ராட்சத பள்ளம் ஏற்பட்ட இடத்தைச் சுற்றி இரும்புத் தடுப்புகளை வைத்து விபத்து ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கழிவுநீர் கால்வாய் பிரச்சனை காரணமாக அங்கு பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளத்தில் இருந்த கழிவுநீரை மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினர். மேலும் 15 அடி பள்ளத்தை அடைப்பதற்கான நடவடிக்கைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.