இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள கற்பனை சுதந்திரத்தை மத்திய அரசின் புதிய விதிகள் தணிக்கை செய்யக் காரணமாக அமைந்துள்ளது எனவும், தனி உரிமையை பாதிக்கும் வகையில் அவை அமைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு சமீபத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்த புதிய விதிகளை எதிர்த்து, பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஒன்றிய அரசு கடந்த பிப்ரவரி மாதம் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து புதிய விதிகளை அறிவித்தது. அதில் முக்கியமாக இந்திய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரான தகவல்கள் சமூகவலைதளங்களில் பகிரப்படுகிறது. எனவே அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், இந்தப் பதிவுகளை யார் பதிவிடுகிறார்களோ அவர்களுடைய விவரங்களை அரசு கேட்டால் கொடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களுக்கு விதிகள் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்த விதிகளை எதிர்த்து, பிரபல கர்நாடக இசை பாடகரான டி.எம்.கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள கற்பனை சுதந்திரத்தை மத்திய அரசின் புதிய விதிகள் தணிக்கை செய்யக் காரணமாக அமைந்துள்ளது எனவும், தனி உரிமையை பாதிக்கும் வகையில் அவை அமைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

டி.எம்.கிருஷ்ணாவின் இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, மனுவுக்கு 3 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்குத் ஒத்திவைத்தனர்.