Omicron update | ஒமிக்ரான் பாதிப்பை இனி உடனே கண்டறியலாம்! ஸ்டாலின் திறந்த ஆய்வகத்த்தை அங்கீகரித்த மத்திய அரசு!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்படுபவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய பின்னரும் கூட மத்திய அரசு அவர்களுக்கான முடிவுகளை அறிவிக்காத நிலை இருந்து வருகிறது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்படுபவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய பின்னரும் கூட மத்திய அரசு அவர்களுக்கான முடிவுகளை அறிவிக்காத நிலை இருந்து வருகிறது.
இரண்டு வருடங்களாக உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், வெவ்வேறு நாடுகளில் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல வகையான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்படும் நிலையில் உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாமல் பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாகவே உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. டெல்டா வகை கொரோனா பரவல் மெல்ல, மெல்ல குறைந்து முடிவுக்கு வரும் நிலையில் இருந்தபோது தென் ஆப்ரிக்காவில் உருமாறிய ஒமிக்ரா வகை கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்த தொடங்கியிருக்கிறது.
இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிலும் நாட்டின் தலைநகரம் டெல்லி, வர்த்தக தலைநகரமான மகராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரான் பரவல் ஜெட் வேகத்தில் செல்கிறது. தமிழ்நாட்டிலும் இதுவரை 45 பேர் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றுக்கு இலக்காகி உள்ளன. பலரது ஆய்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. கொரோனா தொற்றை உண்டாக்க கூடிய வைரஸ், ஆதன் மரபணுவில் உண்டாகும் தொடர் மாற்றங்களால் புதுவகை தொற்றாக உருவெடுக்கிறது.
உருமாறிய கொரோனா தொற்றின் பாதிப்பை கண்டறிய மரபணு பகுப்பாய்வகம் அவசியமாகும். ஆனால் இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் இதற்காக தனியாக ஆய்வகம் அமைக்கப்படாத நிலை இருந்தது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், உருமாறிய கொரோனா வைரஸை கண்டறிவதற்கான ஆய்வகத்தை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பேரில் சென்னை தேனாம்பேட்டையில் டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தில், சுமார் ரூ.4 கோடி செலவில் மரபணு பகுப்பாய்வகம் உருவாக்கப்பட்டது. இதனை கடந்த செப்டம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இது மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த பகுப்பாய்வகத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் இருந்து வந்தது.
ஒமிக்ரான் வகை தொற்றை கண்டறிய அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பெங்களூர், ஐதராபாத், புனே, ஆகிய இடங்களில் செயல்படு ஆய்வகங்களையே நம்பியிருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் மரபணு மாதிரிகளை ஆய்வு செய்து முடிவை அறிவிப்பதில் மத்திய அரசு கால தாமதம் செய்வதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேரடியாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அத்தோடு, ஒமிக்ரான் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை விளக்க வந்த மத்திய அரசின் குழுவிடமும் அவர் இந்த புகாரை தெரிவித்தார். இதற்கு தீர்வு காண தமிழ்நாட்டிலேயே மரபணு பகுப்பாய்வு செய்திட மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கோரிக்கை வைத்தார்.
இந்தநிலையில் தான், தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வகத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இனிமேல் உருமாறிய கொரோனா தொற்றின் முடிவுகளை அறிந்துகொள்ள மக்கள் நீண்ட காலம் காத்திருக்கும் நிலை ஏற்படாது. மேலும், இதன் மூலம் நாட்டிலேயே முதல்முறையாக மரபணு பகுப்பாய்வகத்தை பிரத்யேகமாக அமைத்த மாநிலம் என்ற பெருமையும் தமிழ்நாடு அரசுக்கு கிடைத்துள்ளது.