"ஏன்மா இத்தன நாளா கூட்டி போக வரல " - தாயை கட்டிப்பிடித்து அழுத சிறுவன் !!
6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுவன் தாயை பார்த்ததும் கட்டிப்பிடித்து அழுத சம்பவம் பார்ப்போரை நெகிழ செய்தது .
பொள்ளாச்சியை சேர்ந்தவர் சுரேஷ் . இவருக்கு இரண்டு மனைவிகள். இதில் ஒருவருக்கு பிறந்த சிறுவன் தான் தருண். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் வைத்து தருண் காணாமல் போய் உள்ளான் . பல இடங்களில் தேடியும் தருணை கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் பரமேஸ்வரி என்கிற பெண் தருணையும் சேர்த்து நான்கு குழந்தைகளோடு கரூர் ரயில் நிலையத்தில் வைத்து பிச்சை எடுத்துள்ளார். அவரை பிடித்து விசாரணை செய்த போலீசார் குழந்தைகள் காப்பகம் மூலம் நான்கு பேரையும் மீட்டனர். அதில் மூன்று குழந்தைகளின் பெற்றோர் கண்டுபிடிக்கபட்டு அவர்களிடம் ஒப்படைத்தனர். தருணின் பெற்றோரை மட்டும் கண்டுபிடிக்க இயலாமல் இருந்தது .
குழந்தைகள் ஆணைய தலைவர் திலகவதி இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறினார். இதையடுத்து சித்தூர் தாலுகாவை சேர்ந்த வசந்தி , தருண் தன் மகன் என மீட்க வந்தார். அவரிடம் விசாரணை செய்ததில் தருண் தன் கணவரிடம் வளர்ந்து வந்ததாகவும் அவன் காணாமல் போனதை ஊடகம் மூலம் தெரிந்து வந்ததாக கூறினார். அவரிடம் முறையான ஆவணங்களை பெற்றுக்கொண்ட பின்னர் சிறுவன் தருண் ஒப்படைக்கப்பட்டான்.
நீண்ட நாட்களாக தாயை காணாமல் தவித்த சிறுவன் தருண் " ஏன்மா என்ன கூட்டிபோக வரல?? " என தன் தாயை கட்டிப்பிடித்து அழுதது பார்ப்போரை கலங்க செய்தது .