சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 1.85 கோடி செலவில் புத்தகப் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை திறந்து வைத்தார்.

Book Park Inaugurated At Chennai Central Metro Railway Station: சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் அமைந்துள்ளன. சென்னையின் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் பூந்தமல்லி–போரூர் வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் முதல் கோயம்பேடு பரங்கிமலை வழியாக விமான நிலையம் வரையிலும், விம்கோ நகர் முதல் சென்னை சென்ட்ரல், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி வழியாக விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ர‌யில் நிலையத்தில் புத்தகப் பூங்கா

சென்னையில் சென்ட்ரல் உள்பட பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ர‌யில் நிலையத்தில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் 1.85 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்காவை இன்று (10.6.2025) திறந்து வைத்தார்.

என்னென்ன புத்தகங்கள் கிடைக்கும்?

இந்தப புத்தகப் பூங்காவில் பல்வேறு பதிப்பாளர்களால் வெளியிடப்படும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள உயர்கல்வி பாடநூல்கள், இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள், நாட்டுடைமை நூல்கள், போட்டித் தேர்வு நூல்கள், சிறார் இலக்கிய நூல்கள் மற்றும் பள்ளிப் பாடநூல்கள் ஆகியவை கிடைக்கும்.

110 கூடுதல் நூலகக் கட்டடங்கள்

மேலும் இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் திசைதோறும் திராவிடம், முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்பு திட்டம், இளந்தளிர் இலக்கியத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட 84 நூல்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இது தவிர பொது நூலக இயக்ககம் சார்பில் 29.80 கோடி ரூபாய் செலவில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலகக் கட்டடங்கள், பரமக்குடி முழுநேர கிளை நூலகக் கட்டடம் மற்றும் 70 சிறப்பு நூலகங்களையும் அவர் திறந்து வைத்தார்.

மின்வணிக இணையதள வசதி

இது மட்டுமின்றி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நூல்களை வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் எளிதில் வாங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில் இணைய வழி விற்பனைக்கான மின்வணிக இணையதள வசதியையும் (www.tntextbooksonline.com) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.