#Chennai flood | நல்ல செய்தி... சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலார்ட் நீக்கம்!!
கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெளியேற 2 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால் சென்னை வாசிகள் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழ்நாட்டை நெருங்கி வருகிறது. இதனால் நேற்று இரவு முதலே சென்னை உள்ளிட்ட அதன் சுற்று வட்டாரங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது.
மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கும் வடதமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே கரையை கடந்து செல்ல துவங்கியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு துரிதப்படுத்தியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றடிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த கனமழையால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் நீருக்குள் மூழ்கியுள்ளது. போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதோடு சாலைகளில் திடீர் பள்ளங்களும், அங்குள்ள மரங்களும் சாய்ந்து வருகிறது. தாழ்வு மண்டலம் கரையை கடக்க துவங்கியதால் மிக அதிக வேகத்தில் காற்றடித்து வருகிறது. இதனால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த சிகப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விலக்கி கொண்டுள்ளது. நாளைக்கான (12/11/2021) வானிலை முன்னெச்சரிக்கை வரைபடத்தில் ரெட் மற்றும் ஆரஞ்ச் அலெர்ட் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் கன மழை மற்றும் அதி வேக காற்றுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலசந்தர் தெரிவித்துள்ளார். கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெளியேற 2 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால் சென்னை வாசிகள் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர், மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடல்களில் அதிக சீற்றம் ஏற்பட்டு வருகிறது.