குடும்பத்தை மறக்கடித்த குடிப்பழக்கம்.. விபரீத முடிவை எடுத்த ஆட்டோ ஓட்டுநர்!!
அதிகமான குடிப்பழக்கத்தால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சாலையில் இருக்கும் கடை வாசலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் சாரதி. ஆட்டோ ஓட்டும் தொழில் பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். சாரதி அதிகமான குடிப்பழக்கம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. இதனால் தினமும் கணவன் மனைவி இடையே தகராறு நடந்திருக்கிறது.
நேற்றும் சாரதி அளவுக்கு அதிகமாக குடித்திருக்கிறார். எவ்வளவு குடித்தாலும் வீட்டிற்கு சென்று விடும் சாரதி, நேற்று வெகுநேரமாகியும் வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் அவர் குடும்பத்தினர் சாரதியை பல இடங்களில் தேடி இருக்கின்றனர்.அப்போது தேனாம்பேட்டை இளங்கோ சாலையில் இருக்கும் ஒரு சலூன் கடை வாசலில் அவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்திருக்கிறார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தேனாம்பேட்டை காவல்துறையினர் சாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆட்டோ ஓட்டுநர் சாரதியின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.