மாஸ்க் அணியாதவர்களுக்கு இது ஒரு பாடம்.. அனைத்து கல்லூரிகள் கொரோனா பரிசோதனை.. சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
பல்கலைக்கழகங்கள், விடுதிகள், மேன்ஷன், பெண்கள் தங்கும் விடுதிகளில் பரிசோதனைகளை மேற்கொள்ள முதல்வர்உத்தரவிட்டுள்ளார்.
மாஸ்க் அணியாதவர்களுக்கு சென்னை ஐஐடி ஒரு பாடமாக அமைந்துவிட்டது என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை, தண்டையார்பேட்டையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ராதாகிருஷ்ணன் கூறுகையில்;- சென்னை ஐஐடியில் நேற்று வரை 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 539 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தோம். விடுதிகளில் உள்ளவர்கள், பணியாளர்களுக்கும் பரிசோதனை செய்துள்ளோம். இன்று 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, 953 பரிசோதனை முடிவுகளில் டிசம்பர் 1 -ம் தேதி முதல் இதுவரை 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிவதை கட்டாயமக்க வேண்டும், அணியாவிட்டால் நடவடிக்கை எடுங்கள் என முதல்வர் எங்களிடம் அறிவுறுத்தியுள்ளார். பல்கலைக்கழகங்கள், விடுதிகள், மேன்ஷன், பெண்கள் தங்கும் விடுதிகளில் பரிசோதனைகளை மேற்கொள்ள முதல்வர்உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.
பொதுமக்களுக்கு இது ஒரு பாடம். நோய்த்தொற்று குறைந்துவிட்டதால் முகக்கவசம் அணிய வேண்டாம் என நினைக்கின்றனர். விதிமுறைகளை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது கொள்ளை நோய் சட்டம், பொது சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.