Corona: மாஸ்க் அணியாவிட்டால் ஆப்பு தான்.. அபராத தொகையை உயர்த்திய தமிழக அரசு..!
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதித்த அபராதம் ரூ.200 லிருந்து 500ஆக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதித்த அபராதம் ரூ.200 லிருந்து 500ஆக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மின்னல் வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் கொரோனா பாதிப்பின் தாக்கம் குறையவில்லை. தமிழகத்தின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 18,000 நெருங்கியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 7,300 தாண்டியுள்ளது.
இதனிடையே, பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுமக்கள் பலர் பொதுவெளியில் மாஸ்க் அணியாமல் சென்று வருவதை கண்கூடாக காணமுடிகிறது. இதனால் மாஸ்க் அணியாமல் செல்பவர்களிடம் ரூ.200 இதுவரை அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் மக்கள் பலர் மாஸ்க் அணியாமல் செல்லும் நிலை உள்ளது.
இந்நிலையில், இனி பொதுவெளியில் பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் செல்பவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியில், பொது இடங்களுக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மாஸ்க் அணியும் போது மூக்கு மற்றும் வாய் ஆகியவை மூடியிருக்கும் படி இருக்க வேண்டும். மூக்குக்கு கீழே மாஸ்க் அணிவோருக்கும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.