தமிழ்நாட்டில் மேலும் 58 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 969ஆக உயர்வு
தமிழ்நாட்டில் இன்று மேலும் 58 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை 969ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்துவரும் நிலையில், நேற்று வரை 911ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை, இன்று 969ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துவருவதால், ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
மத்திய அரசு ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடாத நிலையில், ஒடிசா, பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே ஊரடங்கை நீட்டித்துவிட்டன.
இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிராதான் தொடர்ந்து கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 1666 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கடுத்த இரண்டாமிடத்தில் தமிழ்நாடு உள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலைமை செயலாளர் சண்முகம், இதுவரை 9527 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 58 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 969ஆக அதிகரித்துள்ளது. 485 பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்றார்.
இன்று ஒருவர் தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு பலியானதால் பலி எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.