பரிசோதனை குறைவு; பாதிப்பு மட்டும் உச்சம்..! தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 2710 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 2710 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,087ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 2710 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,087ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த, அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ள நிலையில், கடந்த சில தினங்களாக தமிழக அரசு கொரோனா பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.
நேற்று முன் தினம் அதிகபட்சமாக 33231 பரிசோதனைகளும் நேற்று 31,401 பரிசோதனைகளும் செய்யப்பட்ட நிலையில், இன்று பரிசோதனை எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. இன்று 26592 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 2710 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைவிட இன்றைக்கு குறைவான பரிசோதனைகளே செய்யப்பட்ட போதிலும், பாதிப்பு மட்டும் அதிகரித்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62087ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1487 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 42752ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1358 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 34112ஆக அதிகரித்துள்ளது. 27198 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக 53 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 37 உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 794ஆக அதிகரித்துள்ளது.