தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா உயிரிழப்புகள்..! இன்று அதிகபட்ச இறப்பு.. ஒரேநாளில் 1974 பேருக்கு தொற்று
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 1974 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44661ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டிவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த, அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.
அந்தவகையில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 18782 பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், 1974 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44661ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாலில் 1415 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 31896ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1138 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 24547ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 38 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே உயிரிழப்பு எண்ணிக்கை 435ஆக அதிகரித்துள்ளது. நேற்று 30 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 38 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களாக உயிரிழப்பு அதிகரித்துவருவது, கவலையளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது.