தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667ஆக அதிகரித்துள்ளது.  

தமிழ்நாட்டில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டிவருகிறது. அதிகமான தொற்று பாதிப்பை கண்டறியும் விதமாக, அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், கடந்த 4 நாட்களாக பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது தமிழக அரசு. 

மே 3ம் தேதி வரை, தினமும் சராசரியாக 12 ஆயிரம் பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுவந்த நிலையில், 4ம் தேதி முதல் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 4ம் தேதி 16 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டன. 5ம் 15,692 பரிசோதனைகளும் 6ம் தேதி(நேற்று) 16,022 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. இன்று 15,671 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இன்று 15,671 பரிசோதனை செய்யப்பட்டதில், 1,515பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 31,667ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக இன்றும் ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு பதிவாகியுள்ளது. இன்று சென்னையில் 1,156 பேருக்கு தொற்று உறுதியானதால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 22,149ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 633 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில் இன்று 604 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். எனவே குணமடைந்தோர் எண்ணிக்கை 16,999ஆக அதிகரித்துள்ளது. நேற்று 19 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 18 பேர் உயிரிழந்தனர். எனவே உயிரிழப்பு எண்ணிக்கை 269ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் இன்னும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. கொரோனா பரிசோதனை செய்யும் ஆய்வகங்களை அதிகரிக்கும் தமிழக அரசு, பரிசோதனைகளை, பெரியளவில் அதிகரிக்கவில்லை.